வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் இன்றும் மழை தொடரும்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது,
இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. கன்னியாக்குமரி கடல் வளிமண்டலத்தில் உருவான சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த இரு காரணங்களால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று மழை பெய்யும். ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே போன்று, தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யும்.
சென்னையில் இன்று வானம் மேக்கூட்டத்துடன் காணப்படும். சென்னையின் சில இடங்களில் கனத்த மழை பெய்யும் என்றார்.
சென்னையில் 50 மி.மீ மழை:
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக பட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரத்தில் 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை நகரின் புறநகர் பகுதிகளான தாம்பரம், விமானநிலையம் ஆகிய இடங்களில் 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதே போன்று கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டனம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனத்த மழை பெய்துள்ளது.