கொல்கத்தாவில் வன்முறை - ராணுவம் வரவழைப்பு
நந்திகிராம் விவகாரத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வரும் நிலையில், நேற்று கொல்கத்தாவில் புதிய வன்முறை வெடித்தது.
அகில இந்திய சிறுபான்மையினர் இயக்கம் சார்பில் வங்கதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினை வெளியேற்ற வேண்டும், நந்திகிராமில் அமைதி திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.
கொல்கத்தா நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த அமைப்பினர் நடத்திய போராட்டம் திடீரென பெரும் வன்முறையாக, கலவரமாக மாறியது. 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் 35 போலீஸார் உள்பட 70 பேரே படுகாயமடைந்தனர்.
இந்த வன்முறை காரணமாக நகரின் அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டன. நகரமே பெரும் பதட்டமாக காணப்பட்டது.
போலீஸார் பல இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டு வீசியும் கலகக்காரர்களைக் கலைத்தனர். இருப்பினும் சில இடங்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் இருந்தது.
இதையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டது. 5 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியது. இந்த இடங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.
இந்த வன்முறை குறித்து முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்ஜி கூறுகையில், நிலைமை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளது. முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அகில இந்திய சிறுபான்மையினர் இயக்கத் தலைவர்களின் பொறுப்பற்ற போராட்டத்தால்தான் இந்த வன்முறை வெடித்தது. இதன் காரணமாக 3 மணி நேரத்திற்கு நகரின் இயல்பு நிலை பாதித்தது. நிலைமை மோசமாகி விடக் கூடாது என்பதற்காகவே ராணுவம் வரவழைக்கப்பட்டது என்றார்.
நேற்றைய திடீர் கலவரத்திற்கு ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க அரசின் மீதான மக்களின் வெறுப்புதான் போராட்டமாக வெடித்துள்ளதாக மம்தா விமர்சித்துள்ளார்.