நிருபர்களை உதைத்த முகம்மது கைப் மீது வழக்கு
சண்டிகர்: படம் பார்த்து விட்டு வெளியே வந்ததை படம் பிடிக்க முயன்ற பத்திரிகை புகைப்படக்காரரை அடித்து உதைத்த உ.பி. ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டன் முகம்மது கைப் மீது பஞ்சாப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் முன்பு இடம் பெற்றிருந்தவர் கைப். தற்போது உ.பி. மாநில ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். சண்டிகரில் நடந்த ரஞ்சி போட்டியில் பங்கேற்க உ.பி. அணி வந்துள்ளது.
நேற்று மாலை சண்டிகரில் உள்ள ஒரு தியேட்டருக்கு கைப் படம் பார்க்கச் சென்றார். படம் பார்த்து விட்டு அவர் வெளியே வந்தபோது அவரை புகைப்படம் எடுக்க பத்திரிக்கை புகைப்படக்காரர் ஒருவர் முயன்றார். அவருடன் பிற பத்திரிகைகளின் செய்தியாளர்களும் இருந்தனர்.
இதைப் பார்த்ததும் கோபமடைந்த கைப், ஆவேசமடைந்து செய்தியாளர்களைத் தாக்கினார். மேலும் புகைப்படக்காரரை சரமாரியாக அடித்து உதைத்தார். பின்னர் அங்கிருந்து போய் விட்டார்.
கைப்பின் செயலால் அதிர்ச்சி அடைந்த பத்திரிக்கையாளர்கள், கைப் மற்றும் உ.பி. மாநில அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கைப் மன்னிப்பு கேட்க கோரினர். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கைப் கூறி விட்டார்.
இதையடுத்து பஞ்சாப் மாநில உள்துறைச் செயலாளர் கிருஷ்ணமோகன் வீட்டுக்கு பத்திரிக்கையாளர்கள் படையெடுத்தனர். கைப் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து கைப் மீது அடி வாங்கிய புகைப்படக்காரர் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கிருஷ்ணமோகன் உத்தரவிட்டார். இதையடுத்து கைப் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்..