என்னை சிவ தாண்டவம் ஆட வைத்து விடாதீர்கள்-சோம்நாத் சட்டர்ஜி
டெல்லி: சபை நடக்கும்போது யாரும் தேவையற்ற வார்த்தைகளை பேச வேண்டாம் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.
நந்திகிராம் நிலைமை குறித்து மக்களவையில் விவாதம் நடந்தபோது அவையில் பல முறை தொடர்ந்து அமளி ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, எனது பணியிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். நந்திகிராம் விவகாரம் குறித்து விவாதம் நடத்த உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விவகாரம் குறித்து நாகரீகத்துடன் விவாதம் நடத்த வேண்டும் என்றார்.
சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே உறுப்பினர் ஒருவர் பலத்த குரலில் குறுக்கிட்டு பேசினார். உடனே சபாநாயகர், எனக்கு நீங்கள் பாடம் சொல்லித் தர வேண்டாம். நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே நான் இந்த அவையில் உறுப்பினராக இருக்கிறேன் என்றார்.
அப்போது பாஜக தலைவர் அத்வானி பேசும் போது, நந்திகிராம் விவகாரத்தில் உண்மையை தெரிந்து கொள்ள இந்த அவை விரும்புகிறது. உண்மை தான் சிவன். சிவபெருமானை அடைய நந்தியை கடந்து செல்லவேண்டும். இந்த அவையில் சோம்நாத் (சிவபெருமானின் பெயர்) இருக்கிறார் என்றார்.
இதைக் கேட்ட சோம்நாத் சட்டர்ஜி, என்னை சிவ தாண்டவம் ஆட வைத்து விடாதீர்கள். தேவையற்ற வார்த்தைகளை பேச வேண்டாம் என்று உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.