6 மாநகராட்சிகளில் நாளை அதிமுக போராட்டம்
சென்னை: சென்னை, மதுரை உள்ளிட்ட 6 மாநகரங்களில் அரசு நடத்தும் மாணவர் விடுதிகளின் மோசமான நிலையைக் கண்டித்து அந்த நகரங்களில் 23ம் தேதி அதிமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளிலும் அரசு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படும் விடுதிகளில் சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு நிலவும் சுகாதார சீர்கேட்டால், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் எழுந்துள்ளது. மாணவர்கள் பல்வேறு நோய்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்தியாவின் எதிர்காலமாக கருதப்படும் மாணவர்கள், இப்படிப்பட்ட விடுதிகளில் தங்கியிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இங்கு குடிநீர் வசதி மிகவும் மோசமாக உள்ளது. குடிநீரில் சாக்கடை நீரும், கழிவுநீரும் கலந்து வருகின்றன. சமையல் அறைகளுக்குள்ளும் கழிவு நீர் புகுகிறது.
எனது ஆட்சியின்போது அரசு நடத்தும் மாணவர் விடுதிகளை ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன் வைத்திருந்தேன். மாணவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி, தங்களது படிப்புகளில் முழு கவனம் செலுத்த முடிந்தது.
தற்போதைய திமுக ஆட்சியில் நிலவும் இந்த அவல நிலையைக் கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய ஆறு மாநகராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
நெல்லையில் ஓ.பன்னீர் செல்வம், சென்னையில் டி.ஜெயக்குமார், கோவையில் பொள்ளாச்சி ஜெயராமன், சேலத்தில் கே.பழனிச்சாமி, திருச்சியில் சிவபதி, மதுரையில், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் போராட்டத்திற்குத் தலைமை தாங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.