நாளை பிறக்கிறது அரியலூர் மாவட்டம்
கடந்த திமுக ஆட்சியில் பெரம்பலூர் மாவட்டத்ைத இரண்டாகப் பிரித்து புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இந்த முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் மீண்டும் அரியலூர் மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்த தொகுதி மறு சீரமைப்புப் பணி காரணமாக புதிய மாவட்டத்தை அறிவிக்க தடை இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் அந்தத் தடை அகன்றதால், அரியலூர் மாவட்டம் உருவாக்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். மேலும் இதுதொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. புதிய ஆட்சித் தலைவராக சேவியர் கிறிஸ்ஸோ நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், புதிய அரியலூர் மாவட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு அரியலூர் அரசு ஐடிஐ விளயாட்டு மைதானத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மாவட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி தலைமை தாங்குகிறார். மத்திய அமைச்சர் ராசா, மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ் ஆகியோர் இந்த விழாவுக்கு முன்னிலை வகிக்கின்றனர்.
பெரம்பலூர் ஆட்சித் தலைவர் அனில் மேஷராம் வரவேற்பு ஆற்றுகிறார். அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சேவியர் கிறிஸ்ஸோ நன்றியுரை ஆற்றுகிறார்.
அரியலூர் மாவட்டத்தில் இடம் பெறும் தாலுகாக்கள்:
அரியலூர், உடையார்பாளையம், செந்துறை
பஞ்சாயத்து யூனியன்கள்:
அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், டி.பாலூர், ஆண்டிமடம், செந்துறை.