திமுக பெண் கவுன்சிலரின் தலைமறைவு வாழ்க்கை!
மதுரை: மதுரையில் கந்து வட்டிக் கும்பலின் மிரட்டலுக்கு பயந்து திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.
மதுரையைச் சேர்ந்த தாமோதரனின் மனைவி அமுதா. ஐஸ் பேக்டரி நடத்தி வரும் தாமோதரன் தீவிர தேமுதிக தொண்டர். கடந்த சட்டசபை தேர்தலில் மதுரை கிழக்கு சட்டசபை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு தாமோதரன் தோல்வி அடைந்தார்.
அதன் பின்னர் நடந்த மாநகராட்சி தேர்தலில் 54வது வார்டில் தேமுதிக சார்பாக தனது மனைவி அமுதாவை போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்தார். கொஞ்ச காலம் தேமுதிகவில் இருந்த அமுதா பின்னர் திமுகவில் சேர்ந்து விட்டார்.
அமுதாவின் கணவர் தாமோதரன் தேர்தல் செலவுக்காக ரூ.15 லட்சம் வரை கந்து வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.
இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வீடு புகுந்து மிரட்ட ஆரம்பித்ததால் தாமோதரனும், அவரது மனைவி கவுன்சிலர் அமுதாவும் என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பத்துடன் கடந்த சில மாதங்களாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
கந்து வட்டிக் கும்பலின் மிரட்டலால் வார்டுக்கும் செல்ல முடியாமலும், மாநகராட்சி கூட்டத்திற்கும் செல்ல முடியாமலும் கவுன்சிலர் அமுதா தவித்து வருகிறார். இதனால் அவருடைய குழந்தைகளையும் பள்ளிக்கும் அனுப்பவில்லையாம்.
இதற்கிடையே தாமோதரன் தற்கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். தலைமறைவு வாழ்க்கை நடத்திவரும் அமுதா எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் கந்து வட்டிக் கும்பலுக்கு பயந்து தலைமறைவாக உள்ள இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications