அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்-திருமாவளவன்
மதுரை: சட்டம்-ஒழுங்கு தமிழகத்தில் சீராக இருந்தாலும் சில இடங்களில் விரும்பதகாத நிகழ்வுகள் நடக்கின்றன. இது தொடர்பாக அரசு விழிப்புடன் செயல்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூர் கலவரத்தில் தலைமை ஆசிரியர் வின்சென்ட் கொல்லப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முதுகுளத்தூர் கலவரத்தில் கொலை செய்யப்பட்ட வின்சென்ட் சாம்சன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கைதானவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதை திரும்பப் பெற வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம் ஆவரம்பட்டியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களை மட்டும் மீண்டும் சொந்த ஊரில் வாழ வழிவகை செய்ய வேண்டும்.
அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது குழந்தைக்கு காதுகுத்து நிகழ்ச்சிக்கு திருமணம் வாடகைக்கு கேட்டிருந்தார். முதலில் ஒப்புக் கொண்ட திருமண மண்டப உரிமையாளர் மாரியப்பன் அருந்ததியர் என்று தெரிந்ததும் மண்டபத்தை வாடகைக்கு விட மறுத்துவிட்டார். இதனால் காதுகுத்து நிகழ்ச்சி நடுரோட்டில் வைதது நடத்தப்பட்டுள்ளது.
குள்ளஞ்சேரியில் பாமக பிரமுகர் மர்மமான முறையில் இறந்ததை கண்டித்து சாலை மறியல் செய்தவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மதுரை வண்டியூரில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மற்றவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு தமிழகத்தில் சீராக இருந்தாலும் சில இடங்களில் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அரசு விழிப்புடன் செயல்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் திருமாவளவன்.