சிறுவனாக இருந்தபோது அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும்: உயர்நீதிமன்றம்
சென்னை: 16 வயதாக இருந்தபோது 12 வயது சிறுமியைக் கற்பழித்துக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
தர்மபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் கங்காதரன் (27). இவருக்கு 16 வயதாக இருந்தபோது கடந்த 1996ம் ஆண்டு 12 வயது சுமித்ரா என்ற சிறுமியைக் கற்பழித்துக் கொலை செய்தார்.
கைது செய்யப்பட்ட கங்காதரன் மீது தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தது. இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கங்காதரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கங்காதரன் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தனது மனுவில், குற்றம் செய்தபோது எனக்கு 16 வயதுதான் ஆனது. எனவே சட்டப்படி சிறார் நீதிமன்றத்தில்தான் இந்த வழக்கை விசாரித்திருக்க வேண்டும். மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்தியது செல்லாது, தண்டனையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோதே, அதை சிறார் நீதிமன்றத்திற்கு மாற்ற மனுதாரர் கோரியிருக்க வேண்டும். ஆனால் அதை அவர் அப்போது செய்யவில்லை.
மேலும், அவருக்கு 21 வயது ஆனபோதுதான் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தத் தண்டனை சரியானதுதான். எனவே அதை ரத்து செய்ய முடியாது என்று கூறி கங்காதரனின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.