'மோசடி' பெண்ணை கற்பழித்த இன்ஸ்பெக்டர்!: பெண் தற்கொலை, இன்ஸ்பெக்டர் கைது!!
தஞ்சாவூர்: விசாரணை அழைத்துச் சென்று பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக தஞ்சையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் துறையுண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் காவேரி நகரைச் சேர்ந்த ரவிராஜன், கார்த்திக் இருவரிடமும் தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லி ரூ.3 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
ஆனால் சொன்னபடி வேலை எதுவும் வாங்கித் தரவில்லை. இதனால் அவர்கள் இருவரும் ஜானகிராமன் மீது காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் ஜானகிராமன் மற்றும் அவருடைய தம்பி இளையராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜானகிராமனின் உறவினரான கோவையை சேர்ந்த வீராய் என்பவரின் மகள் அகிலா (32) என்பவர் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி இந்த மோசடியை செய்துள்ளது தெரியவந்தது.
இந்நிலையில் தஞ்சை இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன் தலைமையில் போலீசார் கோவைக்கு சென்று அகிலா உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்தியதில் பல மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் ரூ.70 லட்சத்திற்கும் மேல் வேலை வாங்கித் தருவாதக சொல்லி மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அகிலாவை இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன் விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்து வந்தார்.
ஆனால், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், தனியார் ஹோட்டலில் தங்க வைத்துள்ளார். விசாரணை என்ற முறையில் இன்ஸ்பெக்டர் அகிலாவை பார்க்க அடிக்கடி ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
இந் நிலையில் கடந்த 19ம் தேதியன்று அகிலா ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ செளந்தரராஜன் விசாரணை நடத்தியதில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணை மகளிர் காவல் நிலையத்தில் தங்க வைக்காமல் ஹோட்டலில் தங்க வைத்து விசாரணை செய்ததால் இந்த சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சேது மணிமாதவனை டிஐஜி ஆபாஷ்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பான உத்தரவை டிஎஸ்பி முத்தரசி, தஞ்சை மாவட்ட எஸ்பி அலுவலகத்திலிருந்த இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவனிடம் கொடுக்க சென்றபோது அவர் அதை வாங்க மறுத்து வேனில் ஏறி சென்று தலைமறைவாகிவிட்டார்.
தலைமறைவான சேதுமணிமாதவனை எஸ்பி அமீத்குமார் பிடிக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி நேற்று காலையில் இன்ஸ்பெக்டரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை டிஐஜி அலுவலகம் அழைத்து செல்லப்பட்டு சஸ்பெண்ட் உத்தரவு கொடுக்கப்பட்டது.
சஸ்பெண்ட் உத்தரவை கையில் வாங்கிய சேதுமணிமாதவன் தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக கூறியதால் அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து அகிலாவை விசாரணை செய்த ஏட்டு கணேசன் என்பவரையும் சஸ்பெண்ட் செய்ய எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் ஹோட்டலுக்கு வந்த இன்ஸ்பெக்டர் அகிலாவை கற்பழித்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பேச்சு நிலவுகிறது.