செங்கை. அதிமுக பிரமுகர் கொலை - 8 பேர் கைது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர அதிமுக செயலாளர் குரங்கு குமார் மற்றும் அவரது நண்பர் ஆறுமுகம் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு நகர அதிமுக செயலாளராக இருந்தவர் குமார் என்கிற குரங்கு குமார். இவரும், இவரது நண்பர் ஆறுமுகமும் கடந்த 14ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பழிவாங்கும் வகையில் இந்தக் கொலைகள் நடந்ததாக கூறப்பட்டது.
குற்றவாளிகளை போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஹெல்மட் அணிந்தபடி ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அந்த நபரை போலீஸார் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து போலீஸார் துப்பாக்கி முனையில் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
அந்த நபருக்குப் பின்னால் வந்த காரையும் போலீஸார் மடக்கி நிறுத்தினர். அந்தக் காரில் 7 பேர் இருந்தனர். அவர்களையும் துப்பாக்கி முனையில் கீழே இறக்கினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பிரபல ரவுடி ரவி என்கிற ரவி பிரகாஷ் என்று தெரிய வந்தது. இந்தக் கும்பல்தான் குரங்கு குமாரையும், ஆறுமுகத்தையும் கொலை செய்தது என்றும் தெரிய வந்தது.
குமார் மற்றும் ஆறுமுகத்தை கொலை செய்ததை ரவி பிரகாஷ் ஒத்துக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு குமாரின் தம்பி கொலை செய்யப்பட்டார். அந்த கொலைச் சம்பவத்தில் ரவி பிரகாஷும் ஒரு குற்றவாளி. இந்த வழக்கில் குமார் முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். எனவே அவரைத் தீர்த்துக் கட்டி விட்டால் வழக்கிலிருந்து தப்பலாம் என்பதால் இந்தக் கொலையை திட்டமிட்டுச் செய்ததாக ரவி பிரகாஷ் தெரிவித்தார்.
இதையடுத்து 8 பேரையும் கைது செய்த போலீஸார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
குற்றவாளிகளை விரைவில் பிடித்ததற்காக தனிப்படை போலீஸாருக்கு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. பெரியய்யா பாராட்டு தெரிவித்தார்.
இந்தக் கொலை வழக்கில் மேலும் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர். இவர்களில் 2 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்களைப் பிடிக்க திருச்சிக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications