அடுத்து தேர்தலில் முதல்வராவேன்-விஜயகாந்த்
சென்னை: உடைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை சீர் செய்து மீண்டும் திறந்திருக்கிறோம். இது போல் எங்களை உடைத்தாலும் மீண்டும் உருவாவோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை, கோயம்பேடு அருகே மேம்பாலம் அமைப்பதற்காக தேமுதிக அலுவலகம் மற்றும் விஜயகாந்தின் திருமண மண்டபம் சில மாதங்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டது. இதில் மீதமிருந்த இடத்தில் கட்டப்பட்ட கட்சி அலுவகத்தை திறந்து வைத்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகளின் போராட்டம் நியாயமானது. அவர்கள் கோரிக்கையில் தவறில்லை. அவர்கள் உணர்வுகளை மதிக்கிறேன். 5 வருடம் மருத்துவப் படிப்பு முடித்தப் பின்னர் 1 வருடம் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். அந்த காலத்துக்கு தற்காலிக டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்.
கிராம சேவை காலத்துக்கு சம்பளமும் கொடுக்க வேண்டும். இதற்கு ஏற்றார் போல மத்திய-மாநில அரசுகள் சட்டதிட்டங்களை மாற்ற வேண்டும்.
நான் எப்போதுமே தனி ஆளாக செயல்படுவேன் என்பதை பலமுறை கூறியிருக்கிறேன். யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டும்தான் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். எனக்கு இந்த பாதுகாப்பு தேவையில்லை. தொண்டர்களின் பாதுகாப்பு எனக்கு எப்போதும் இருக்கிறது. எனவே எளிதாக மக்களை சந்திப்பேன்.
அடுத்து எப்போது தேர்தல் வருகிறதோ அப்போது நான் முதல்வர் ஆவேன். உடைக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை சீர் செய்து மீண்டும் திறந்திருக்கிறோம். இது போல் எங்களை உடைத்தாலும் மீண்டும் உருவாவோம் என்றார்.