விவசாயியின் கொலையாளி இன்ஸ்பெக்டரையும் கொல்ல செய்ய முயற்சி
திசையன்விளை: வீட்டின் முன் மின்வயர் சென்றது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் விவசாயியை வெட்டிப் படுகொலை செய்தவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்ய முயலும் போது அவரையும் கொலையாளி வெட்ட முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உவரி அருகேயுள்ள இடையன்குடி தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் ஜெபத்துரை. இவருக்கு திருமணமாகி பாப்பு அம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சாமுவேல்ராஜ். குடிப்பழக்கம் கொண்ட இவர் அடிக்கடி வந்து ரகளை செய்யதால் மனைவி மற்றும் குழந்தைகள் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.
ஜெபத்துரை வீட்டு மின்வயர் சாமுவேல்ராஜ் வீட்டு வழியாக செல்கிறது. இதனால் இருவருக்கிமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அப்போது ஜெபத்துரையும், சாமுவேல்ராஜூம் இனிமேல் நாங்கள் தகராறு செய்யமாட்டோம் என்று கூறினர்.
இந்த பிரச்சனை தொடர்பாக ஜெபத்துரையை நான் வெட்டாமல் விட மாட்டேன் என்று சாமுவேல்ராஜ் ஊரில் கூறி வந்தார். ஆனால் குடிகாரரான சாமுவேல்ராஜின் பேச்சை ஜெபத்துரை பெரிதாக நினைக்கவில்லை.
இந்நிலையில் மதியம் 3.30 மணியளவில் ஜெபத்துரை தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சைக்கிளில் அரிவாளை மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.
சிறிது தூரம் சென்றதும் எதிரே நடந்து வந்த சாமுவேல்ராஜ் அவரை வழிமறித்து சைக்கிளில் தொங்கவிட்டிருந்த அரிவாளை எடுத்து ஜெபத்துரையின் கழுத்தில் ஓங்கி வெட்டினார்.
இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் சாமுவேல்ராஜ் ரத்தத்துடன் அரிவாளை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்று கதவை தாளிட்டுக் கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வள்ளியூர் டி.எஸ்.பி ராஜகோபால், உவரி இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜூலியட் எபினேசர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் சாமுவேல்ராஜ் வீட்டிற்கு சென்று அவரை வெளியே வருமாறு கூறி கதவை தட்டினர். அப்போது பின் பக்க கதவை திறந்து கொண்டு வெளியே வந்த சாமுவேல்ராஜ் யாருடா கதவை தட்டியது என்று கூறியவறே இன்ஸ்பெக்டர் ரவியை நோக்கி அரிவாளை ஓங்கியவாறு ஓடிவந்தார்.
அப்போது அங்கிருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். சாமுவேல்ராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications