மற்றவர்கள் கையெழுத்தை போட்டேன்-ஸ்டாலின்
ராமநாதபுரம்: கட்சிக்கு பணம் வசூல் செய்வதற்காக மற்றவர்கள் கையெழுத்தை நானே போட்டேன் என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசியதாவது,
1967ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்காக முதன் முதலில் ரூ. 11 லட்சம் வசூல் செய்து வெற்றி கண்டவர் கருணாநிதி. அன்றே வசூலில் சாதனை படைத்தவர்.
கோபாலபுரம், அறிவாலயம் வரும் தொண்டர்களிடம் நானே பல்வேறு ரசீதுகளை காட்டி பணம் வசூல் செய்து கட்சிக்கு தந்துள்ளேன். இதற்காக மற்றவர்களின் கையெழுத்துகளை நானே போட்டுள்ளேன். இப்படி வசூல் செய்து தான் திமுக கூட்டங்கள் நடந்தன. இதனால் திமுகவின் வளர்ச்சியில் அனைத்து தொண்டர்களுக்கும் பங்குண்டு.
ராமநாதபுரம் நகரம், ஒன்றிய பகுதிகளிலிருந்து நெல்லை திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வருவதாக ஒரு பட்டியலை கொடுத்துள்ளனர். அப்படி அவர்கள் சொன்னபடி மாநாட்டிற்கு வரவில்லை என்றால் அவர்கள் கட்சியில் அந்த பதவியில் இருக்க தகுதியற்றவர்கள் ஆவர் என்றார்.