புதுச்சேரியில் கைதிகளுக்கு தொலைபேசி வசதி!
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தொலைபேசி வசதியை செய்து கொடுத்துள்ளது அம்மாநில அரசு.
புதுச்சேரி சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் புழங்குவதாக புகார்கள் வந்த வண்ணம் உல்ளன. அவ்வப்போது சேதனை நடத்தி கைதிகளிடம் இருந்து செல்போன்களை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஆனால், சிறைக்குள் செல்போன்கள் ஊடுருவ உதவியாக இருப்பது சிறைத்துறை ஊழியர்களிடையே நிலவும் ஊழல் தான் காரணம். அதை அரசால் ஒழிக்க முடியவில்லை.
காசு கொடுத்தால் கத்தியைக் கூட கொண்டு போய் கைதிகளிடம் தர இவர்கள் ரெடி.
இந் நிலையில் கைதிகளிடம் செல்போன் புழக்கத்தை தடுக்க புதுச்சேரி அரசு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள காயின் போன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத் திட்டத்தை சிறைத்துறை ஐஜி வாசுதேவராஜ் துவக்கி வைத்தார். குடும்பத்தாருடன் அவர்கள் பேசுவதன் மூலம் கைதிகளின் மன அழுத்தம் குறைவதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், இந்த போன் மூலம் தங்களது சட்ட விரோத காரியங்களை கைதிகள் சிறையில் இருந்தபடியே செய்யவும் வசதி ஏற்பட்டு விடும். அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கிறார்களோ தெரியவில்லை.