கருணாநிதிக்கு தமுமுக பாராட்டு விழா
சென்னை: முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பு தங்களுக்குத் திருப்தி அளிப்பதாக தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமுமுக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கூறுகையில், தற்போதுள்ள சூழ்நிலையில், முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தலா 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை திமுக அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது. இதை சிறந்த ஏற்பாடாக நாங்கள் கருதுகிறோம்.
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தமிழக அரசு வழங்கும் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலவையில் உள்ள நிலையில் சிறுபான்மையினருக்கு இந்த அளவில்தான் இட ஒதுக்கீடு அளிக்க முடியும்.
மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு என்பதை 50 சதவீதமாக குறுக்கவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது என்பதையும் சிறுபான்மையினர் மறந்து விடக் கூடாது.
சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதியைப் பாராட்டி நவம்பர் 24ம் தேதி சென்னையில் நன்றி தெரிவிக்கும் மாநாடு நடத்தப்படவுள்ளது.
இட ஒதுக்கீடு கோரி 15 மாவட்ட மாநாடுகளை நாங்கள் நடத்தினோம். பல்வேறு போராட்டங்களையும் நடத்தி பலரும் சிறை சென்றுள்ளனர். எனவே தற்போது கிடைத்துள்ள இட ஒதுக்கீட்டை கொண்டாட நேரம் வந்துள்ளது.
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார். மேலும், சிறுபான்மையனர் பேரமைப்பின் தலைவர் பீட்டர் பெர்னாண்டோ, ஒருங்கிணைப்பாளர் எஸ்ரா.சற்குணமும் பங்கேற்றுப் பேசவுள்ளனர் என்றார் ஜவாஹிருல்லா.












Click it and Unblock the Notifications