காலி குடங்களுடன் கலெக்டரை முற்றுகையிட்ட பெண்கள்
வாசுதேவநல்லூர்: குடிநீர் விநியோகம் செய்யபடாத நிலையிலும் பேரூராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்தி வருவதாக கூறி பெண்கள் கலெக்டரை முற்றுகையிட்டதால் வாசுதேவநல்லூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தேவைக்காக ஊருக்கே மேற்கே 5 கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2,500 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுமக்கள் குடிநீர் இணைப்பு பெற வைப்புக் தொகை செலுத்தி விண்ணப்பித்தனர். இதில் 1,500 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிதாக கொடுக்கப்பட்ட இணைப்புகளில் சீராக குடிநீர் விநியோகிக்கப்பதில்லை என 6,7,8வது வார்டு பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இது குறித்த பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் பிரகாஷை அப்பகுதி பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகையிட்டனர்.
கடந்த 9 மாதங்களாக தண்ணீர் வராமல் குடிநீர் கட்டணம் செலுத்தி வருவதாகவும், ஆனால் குடிநீர் விநியோகம் சீராக இருப்பதில்லை என்று கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜிடம் உடனடியாக குடிநீர் சீராக வினியோகம் செய்திட தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications