உரு மாறும் தபால் பெட்டிகள்!!
பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் ஆன தபால் பெட்டிகளை புழக்கத்தில் விட தபால் துறை தீர்மானித்துள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் சிவப்பு நிறத்திலான, இரும்பு தபால் பெட்டிகள்தான் புழக்கத்தில் உள்ளன. கிட்டத்தட்ட 5 லட்சத்து 90 ஆயிரம் தபால் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தபால் பெட்டிகளை மாற்றி விட்டு பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் ஆன பெட்டிகளை புழக்கத்திற்குக் கொண்டு வர தபால் துறை முடிவு செய்துள்ளது.
மேலும் புதிய வகை தபால் பெட்டிகளில் விளம்பரங்களும் இடம் பெறப் போகின்றன. இதன் மூலம் தொய்ந்து போய்க் கிடக்கும் தபால் துறைக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும். எனவே சிவனே என்று நிற்காமல், தனது துறைக்கு வருமானத்தையும் ஈட்டித் தரப் போகின்றன இந்தப் புதுப் பெட்டிகள்.
இந்த புதிய வகை தபால் பெட்டிகளை மும்பை ஐஐடி உருவாக்கியுள்ளது. 3 வருடங்களுக்கு முன்பு இதுகுறித்து திட்ட ஆய்வை மேற்கொண்ட மும்பை ஐஐடி தற்போது இதை நனவாக்கியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு இந்த புதிய வகை தபால் பெட்டிகளை சோதனை முயற்சியாக டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் 300 இடங்களில் வைத்தனர். இந்த தபால் பெட்டிளுக்கு மக்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதால் தபால் துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.
புதிய வகை தபால் பெட்டிகளை உருவாக்க பெட்டி ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் செலவாகுமாம். இது பழைய தபால் பெட்டிகளை உருவாக்குவதை விட விலை அதிகம்தான். இருந்தாலும், விளம்பரங்களை இடம் பெறச் செய்வதன் மூலம் இந்த செலவை ஈடு கட்ட முடியும் என்கிறது மும்பை ஐஐடி.
புதிய வகை தபால் பெட்டிகள் நீண்ட காலத்திற்கு உழைக்கும். துருப் பிடித்தல், நிறம் மங்குதல், உடைதல் போன்ற பிரச்சினைகள் எதுவும் வராது. பரமாரிப்பதும் சுலபம்.
புதிய வகை தபால் பெட்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளால் அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குள் 20 ஆயிரம் பெட்டிகளை தயாரிக்க ஐஐடியும், தபால் துறையும் தீர்மானித்துள்ளன. 3 ஆண்டுகளில் 3 லட்சம் தபால் பெட்டிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.