இந்தி மொழிபெயர்ப்பு: தமிழக எம்.பிக்கள் அதிருப்தி
டெல்லி: ராஜ்யசபாவில் நேற்று பேசிய தமிழக எம்.பிக்கள், தங்களது தமிழ்ப் பேச்சை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிபெயர்க்கும் வசதி இல்லாதது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளில் பேசலாம். தாங்கள் பேசும் பேச்சை முன்பே தெரிவித்து விட வேண்டும். அதன் ஆங்கில மற்றும் இந்தி மொழிபெயர்ப்பு ஹெட்போன்கள் மூலம் பிற உறுப்பினர்கள் கேட்க முடியும்.
இந்த நிலையில் நேற்று ராஜ்யசபாவில் அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் பேச எழுந்தார். நந்திகிராம் பிரச்சினை குறித்து அவர் பேசத் தொடங்கினார். முதலில் அவர் தமிழிலேயே பேசினார். இதனால் அவையில் இருந்தவர்களுக்கு அவர் என்ன பேசுகிறார் என்பது புரியவில்லை.
பின்னர் மைத்ரேயன் கூறுகையில், தமிழில் பேசினால் அதை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிபெயர்க்கும் வசதி இங்கு இல்லை. இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அது கவனிக்கப்படவில்லை என்றார்.
மைத்ரேயன் பேச்சுக்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தனர். பாஜகவும், தமிழக எம்.பிக்களுக்கு ஆதரவு தெரிவித்தது. அக்கட்சியின் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்ப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட மொழியை, இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வசதி செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது என்றார்.
பிரச்சினை சூடாவதை உணர்ந்த ராஜ்யசபா துணைத் தலைவர் ரஹ்மான் கான், இது நிர்வாக விஷயம். இதை அவையில் விவாதிக்க முடியாது. தமிழ் தவிர தெலுங்குக்கும் மொழிபெயர்ப்பாளர் தேவை என்று ராஜ்யசபா செயலகம் விளம்பரப்படுத்தியிருந்தது. ஆனால், யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றார்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆவேசமடைந்த மைத்ரேயன், யாரும் விண்ணப்பிக்காமல் போனால் அதற்கு நாங்கள்தானா பொறுப்பு என்று கோபமாக கேட்டார்.
அப்போது குறுக்கிட்ட ரஹ்மான்கான், இந்த விவகாரம் குறித்து இங்கு விவாதிக்க முடியாது. அவைத் தலைவர் அறையில் விவாதிக்கலாம் என்று கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பின்னர் மைத்ரேயன் ஆங்கிலத்தில் தனது பேச்சைத் தொடர்ந்தார்.