மாணவர்கள் நலன் பற்றி ஜெ பேசலாமா?: திமுக மாணவரணி
சென்னை: மாணவர்களின் நலனை பற்றி பேச அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று திமுக மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாணவர்களை ஏமாற்றி தேவையில்லாத ஆர்ப்பாட்டத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜெயலலிதா ஆட்சியில் தலைமைச் செயலகம் கட்ட ராணி மேரி கல்லூரியை இடிக்க உத்தரவிட்டார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் மற்றும் 6 எம்.எல்.ஏக்கள் மீதும் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளினார்.
மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தை ரத்து செய்தார். கல்விக் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தினார். கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் 3 பேரை, சுயநலத்துக்காக எரித்து சாம்பலாக்கியவர்களுக்கு, மாணவர்கள் நலன் பற்றி பேச எந்தவித தகுதியும் இல்லை.
மாணவர்களை ஜெயலலிதா தவறான வழிக்கு கொண்டு செல்வாரேயானால், அவரை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.