பஸ் எரிப்பு வழக்கு: அப்பீல் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 28 பேர் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தர்மபுரியில் கடந்த 2000மாவது ஆண்டு கோவை வேளாண் பல்கலைக்கழகப் பேருந்து அதிமுகவினரால் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரோடு கருகி இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சேலம் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனையும், 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து 28 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். அதில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அதேசமயம், 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரி பலியான மாணவி கோகிலவாணியின் தந்தை மேல் முறையீடு செய்திருந்தார்.
28 பேரின் மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.