சபரிமலை சீசன்- சென்னையிலிருந்து கூடுதல் ரயில்கள்
சென்னை: சபரிமலை கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து கேரளாவிற்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் கடந்த 17ம் தேதி துவங்கின. 41 நாட்கள் நடக்கும் இந்த விழாவிற்கு உலகமெங்கும் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் தமிழகத்திலிருந்து கேரளாவின் கோட்டயம், திருவனந்தபுரம் செல்லும் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னை வழியாக ஐயப்பன் கோவிலிக்கு செல்லும் வெளி மாநில பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால் கூட்டத்தை சமாளிக்கவும், பக்தர்களின் வசதிக்காவும் தென்னக ரயில்வே சென்னையிலிருந்து கூடுதல் ரெயில்கள் இயக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோட்டயம் சந்திப்பு வரை 13 ரெயில்கள் கூடுதலாக விடப்படும். இது தவிர சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்கப்படும்.
இதே போல் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புதிதாக 29 சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.