மருதாணி வைத்ததற்காக பள்ளி மாணவன் சஸ்பெண்ட்
சென்னை: கையில் மருதாணி வைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்த மாணவனை பள்ளியிலிருந்து 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்ததுடன், ரூ.500 அபராதம் விதித்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமை கமிஷனில் மாணவனின் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.
சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் கணேஷ்ராம். இவருக்கு திருமணமாகி பிரபாவதி என்ற மனைவியும், கவுசிக் என்ற மகனும் இருக்கிறார்கள். கணேஷ்ராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், பிரபாவதி செஷன்சு நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்களது மகன் கவுசிக் தனியார் பள்ளியொன்றில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 19ம் தேதி பள்ளிக்கு சென்ற கவுசிக் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சொல்லி வீட்டுக்கு அனுப்பப்பட்டான். கவுசிக்கின் பெற்றோர் இதுகுறித்து பள்ளிக்கு சென்று கேட்டுள்ளனர்.
அதற்கு பள்ளி நிர்வாகத்தினர், உங்கள் மகன் கையில் மருதாணி வைத்து வந்துள்ளான். எங்கள் பள்ளியில் படிக்கும் யாரும் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டு வர அனுமதியில்லை. அதனால் அவனை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து, ரூ.500 அபராதம் விதித்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.
வரும் நவம்பர் 30ம் தேதி அரையாண்டு தேர்வு நடக்க இருப்பதால் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள் என்று பெற்றோர் கெஞ்சியுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினரோ அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லையாம்.
அதனால் மாணவனின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமைக் கமிஷனிலும், பள்ளிக்கல்வி துறையிலும் புகார் தெரிவித்துள்ளனர்.