மயூரா ஜெயக்குமார் மீதான தாக்குதல்: மேலும் 2 பேர் கைது
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் மீதான தாக்குதல் வழக்கில் மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் கடந்த 11ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் வைத்து வெட்டப்பட்டார். இந்த கொலை வெறித் தாக்குதல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ உள்ளிட்ட 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை காங்கிரஸ் கவுன்சிலர் சைதை வில்லியம்ஸ், அவரது உதவியாளர் மோகன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ரத்தினகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நிக்கல்சன் (30) முக்கியக் குற்றவாளியாக கருதப்படுபவர். இவர் ஒரு டிரைவர் ஆவார். இவரது வேனில்தான் சம்பவ நாளன்று குற்றவாளிகள் சத்தியமூர்த்தி பவனுக்கு
ஆயுதங்களுடன் வந்தனர். அந்த வேன் நிக்கல்சனுக்குச் சொந்தமானது.
மேலும் மதன் (21) என்பவரும் பிடிபட்டுள்ளார். இவர் கூலிப் படையில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவர். இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் வேனை அமர்த்திய பிரபு என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள விஷ்ணுபிரசாத் 2 வார கால முன்ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.