ஸ்டாலின் பாங்காக் போனது ஏன்?: விஜயகாந்த் மீண்டும் கேள்வி

தனது கோயம்பேடு திருமண மண்டபத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்க அமர்ந்தார். அப்போது கோயம்பேடு மேம்பாலப் பணிக்காக அவரது அலுவலகத்திற்கு பின்புறம் இயந்திரம் மூலம் தூண் அமைக்கும் பணி துவங்கியதால் ஒரே இரைச்சல் ஏற்பட்டது.
இதனால் விஜயகாந்த் பேசியது யாருக்கும் கேட்கவில்லை. டென்சனான விஜய்காந்த், பார்த்தீங்களா... நான் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலேயே அவங்க ஆரம்பிச்சிட்டாங்க. போய் அதை அப்புறமா செய்யச் ெசால்லுங்க என கட்சி நிர்வாகிகளை அனுப்பினார்.
இதையடுத்து தூண் அமைக்கும் பணியை நிறுத்தினர் அதிகாரிகள். இதையடுத்து நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது,
தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் பிரமுகர்கள் கொலையில் உள்ள பின்னணி விவரங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்போது தான் உண்மை என்னவென்று தெரியும்.
தேவர் ஜெயந்தியன்று திமுக தலைவரின் பேனர்களை பாதுகாப்பதில் போலீசார் அதிக அக்கறை காட்டியதால் தான் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது தாக்குதல் சம்பவம் நடந்தது.
போலீசார் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படாமல் பொதுமக்களுக்காக பணியாற்ற வேண்டும்.
எனது தொகுதியில் நடந்த ரயில்வே விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுத்தார்கள். ஆனால், விழா நடக்கும் தேதி குறித்து கூட என்னிடம் கலந்து பேசவில்லை. நீங்கள் விழாவுக்கு வரவில்லையென்றால் அதனை எழுதிக் கொடுங்கள் என்று கூறுகின்றனர்.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவிற்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்தது அவரது கருத்து. அரசு பதவியில் உள்ள அவர் இது போன்று அஞ்சலி செலுத்தலாமா என்பதை சட்ட வல்லுனர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
அமைச்சர் ஒருவர் (ஸ்டாலின்) பாங்காக் போய் வந்த மர்மம் குறித்து நான் எழுப்பிய கேள்விக்கே இதுவரை பதில் வரவில்லை.
பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கார்த்திக் காலையில் ஒன்று பேசுவார், மாலையில் ஒன்று பேசுவார். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல நான் தயாராக இல்லை என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications