குருவுக்காக அல் கொய்தா பெயரில் மிரட்டல் - சிஷ்யர் கைது
அயோத்தி: அயோத்தி ஸ்ரீராம் ஜென்மபூரி நியாஸ் தலைவரான சாமியார் நிருத்ய கோபால் தாஸுக்கு உயர் மட்ட பாதுகாப்பு பெறுவதற்காக, அல் கொய்தா பெயரில் தாஸுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய அவரது சிஷ்யரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அயோத்தி ராம் ஜென்மபூமி இயக்கத்தில் மிகவும் முக்கியமாக செயல்பட்டு வருபவர் கோபால் தாஸ். இதுதொடர்பான ஸ்ரீராம் ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
இவருக்கு சமீபத்தில் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அல் கொய்தா அமைப்பின் பெயரில் எழுதப்பட்ட அக் கடிதத்தில், நீங்களும் உங்களது சிஷ்யர்களும் முஸ்லீம்களாக மாறி விடுங்கள். இல்லாவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே கோபால் தாஸும், அவரது சிஷ்யர்களும் சரயு நதியில் குளிக்கச் சென்றபோது அவர்கள் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. எனவே இந்த மிரட்டல் கடிதத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பாத போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சந்தோஷ் ஜெய்ஸ்வால் என்பவர் சிக்கினார். இவர் கோபால் தாஸின் சிஷ்யர்களில் ஒருவர். தனது குருவுக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களான அசோக் சிங்கால், பிரவீண் தொகாடியா ஆகியோருக்கு அளிக்கப்படும் அளவுக்கு உயர் மட்டப் பாதுகாப்பு தரப்படவில்லை என்ற கவலை சந்தோஷுக்கு இருந்தது.
எனவேதான், தனது குருவுக்கு உயர் மட்டப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அல் கொய்தா பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார் சந்தோஷ் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
ஹரித்வாரில் வைத்து சந்தோஷை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications