கரடிகளுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்ட தொழிலாளி
கோவை: சத்தியமங்கலம் அருகே இரு கரடிகளுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்ட கூலித் தொழிலாளி படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சத்தியமங்கலம், சிக்கூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவநயன். இவரது நண்பர் மாதேவன். இருவரும் கர்லைன் என்ற இடத்திற்கு கூலி வேலைக்கு சென்றனர்.
இருவரும் காட்டுப் பகுதியில் சென்றபோது, திடீரென கரடிகள் குறுக்கிட்டன. இதைப் பார்த்த மாதேவன் தப்பி புதருக்குள் பதுங்கினார். ஆனால் சிவநயன் மட்டும் 3 கரடிகளிடம் சிக்கிக் கொண்டார்.
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கரடிகளுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டுத் தப்பப் பார்த்தார். ஆனால் கரடிகள் அவரை கடித்துக் குதறின. இதனால் கால்களிலும், தலையிலும் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் கரடிகள் ஓடி விட்டன. இதையடுத்து மாதேவன் ஓடி வந்து சிவநயனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். கோவை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவநயன் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிவநயன் காட்டு விலங்குகளிடம் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்பு பலமுறை காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட சில விலங்குகளிடம் சிக்கி இதுபோல சண்டை போட்டுத் தப்பியுள்ளார். இந்த முறை கரடிகளிடம் சிக்கிக் கொண்டார்.
மேலும் சந்தனக் கடத்தல் வீரப்பன் இருந்தபோது, இவரும் மேலும் 6 பேரும் காட்டுக்குள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வீரப்பன் கும்பல் இவர்களை போலீஸ் உளவாளிகள் என நினைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சிவநயன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் மற்ற 6 பேரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications