பெண் டாக்டரிடம் ரூ. 1 கோடி மோசடி செய்த பெண் டாக்டர்
சென்னை: சென்னையில் பெண் டாக்டரிடம் ரூ. 1.13 கோடி மோசடி செய்ததாக இன்னொரு பெண் டாக்டர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் சித்ரா இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில்,
என் சொந்த ஊர் தஞ்சாவூர். எனது ஊரைச் சேர்ந்தவரும் இப்போது சென்னை கொட்டிவாக்கத்தில் மருத்துவமனை வைத்து நடத்தி வருபவருமான மாயா ராம் என்ற பெண் டாக்டர் நட்புரீதியாக பழகினார்.
எனக்கும் சொந்தமாக மருத்துவமனை கட்டும் ஆசை இருந்தது. என் விருப்பத்தை மாயாவிடம் சொன்னேன். அதற்கு உதவுவதாகக் கூறினார்.
தனக்கு வெளிநாட்டில் அறக்கட்டளை நடத்துவோரைத் தெரியும் என்றும், இந்தியாவில் தொழில் தொடங்க அவர்களிடமிருந்து ரூ. 500 கோடி முதல் ரூ. 3000 கோடி வரை கடன் வாங்கி தர முடியும் என்றும் கூறினார்.
பிரான்ஸ் நாட்டில் ஒரு அறக்கட்டளை இருப்பதாகவும், அதனிடமிருந்து ரூ. 500 கோடி பணம் வாங்கித் தருவதாகவும் கூறிய அவர் அதற்கு முன் கூட்டி அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்றார்.
அவரை நம்பிய நான் பணம் கொஞ்சம் கொஞ்சமாக ரூ. 1.13 கோடியேயை தந்தேன். ஆனால், நெடுநாட்கள் ஆகியும் கடன் தொகை வரவில்லை. மாயாவிடம் கேட்டபோது அவர் சரியான பதில் தரவில்லை.
இந் நிலையில் என்னை சந்திப்பதைத் தவிர்த்தார். ஒரு கட்டத்தில் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை நீண்ட முயற்சிக்குப் பின் செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆனால், அவர் தரவில்லை.
எனது 1.13 கோடியை அவரிடமிருந்து திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது மனுவில் டாக்டர் சித்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரை விசாரணை நடத்த கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்.