முதல்வராக கட்சி துவங்குகின்றனர்-ஸ்டாலின்
திருநெல்வேலி: இப்போது புதிதாக கட்சி தொடங்குபவர்கள், கட்சி துவங்கிய ஒரு மாதத்திலேயே முதல்வராக வர வேண்டும் என்று கருதுகிறார்கள் என அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
பாளையங்கோட்டையில் நடந்த திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது,
தற்போது புதிது புதிதாக கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த கட்சிகளுக்கு எந்த கோட்பாடும் கிடையாது. கிண்டலுக்காக பேசுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.
புதிதாக கட்சி துவங்குபவர்களுக்கு லட்சியம், கோட்பாடு, குறிக்கோள், கொள்கை எதுவுமில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் முதல்வராக வரவேண்டும் என்பது தான்.
சிலர் கட்சி துவக்கிய ஒரு மாதத்திலும், சிலர் கட்சி துவங்கும்போதே முதல்வராக வரவேண்டும் என்று கருதுகின்றனர்.
இளைஞர்கள் முன்னேற்ற அந்த கட்சிகளிடம் திட்டங்கள் ஏதும் இருக்கிறதா. இளைஞர்கள் சிலர் திசைமாறி பதவி, பொறுப்புகளுக்கு ஆசைப்பட்டு புதுக் கட்சிகளில் சேருகிறார்கள்.
பொறுப்புகளை பெற வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்களுக்கு உள்ளது. அதில் தவறு ஏதும் கிடையாது. ஆனால் இன்றைய இளைஞர்கள் பதவி, பொறுப்புகளை தேடி செல்லக் கூடாது. பொறுப்புகள் அவர்களை தேடி வரும் வகையில் கட்சிக்காக பணியாற்ற வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.