6 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத வி.ஏ.ஒ அலுவலகம்!
நாகர்கோவில்: நாகர்கோவிலில், மின் கட்டண பாக்கியால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கடந்த 6 வருடங்களாக இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
வடிவீஸ்புரம், கருப்புக் கோட்டை, ஊட்டுவாழ்மடம், கரியமாணிக்கபுரம், இருளப்பபுரம், சரக்கல் விளை, கீழமறவன் குடியிருப்பு, மீனாட்சிபுரம், கலைநகர், வேதநகர் என நகரின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய வடிவீஸ்வரம் கிராம நிர்வாக அலுவலகம் நாகர்கோவில் ரோட்டில் உள்ளது.
இலவச பட்டாவில் இருந்து பல்வேறு சான்றிதழ்களுக்காக தினமும் நூற்றுகனக்கானோர் வந்து செல்கின்றனர்.
இப்படி நகரின் முக்கிய கிராம நிர்வாக அலுவலகமான இந்த அலுவலகத்திற்கு கடந்த 6 வருடங்களாக மின்சாரம் இல்லை. தொடர்ந்து மின்கட்டண பாக்கி வைத்து ரூ.16 ஆயிரத்தை தாண்டவே, வேறு வழியில்லாமல் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.
மின்சாரம் தூண்டிக்கப்பட்டு 6 வருடங்களாகியும், இதுவரை மீண்டும் மின்சாரம் வர யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அலுவலகத்தில் உள்ள விளக்குகள், மின் விசிறிகள் ஆகியவை காட்சிப் பொருட்களாக மாறியுள்ளன. மின் அளவீட்டுக்கான மீட்டர் துருப்பிடித்துப் போய்க் கிடக்கிறது.
மின் கட்டணப் பாக்கியை கட்டவும், மின் இணைப்பை மீண்டும் பெறவும் உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால், கிராம நிர்வாக அலுவலகம் இருளடைந்து கிடக்கிறது.