மக்களை ஏமாற்ற மாட்டோம்-கருணாநிதி
சென்னை: நாங்கள் மக்களை என்றைக்கும் ஏமாற்ற மாட்டோம் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் இலவச கலர் டிவி மற்றும் சிலிண்டர் இணைப்புடன் கூடிய இலவச கேஸ் அடுப்புகள் வழங்கும் விழா நடந்தது. டிவி மற்றும் கேஸ் அடுப்புகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
எங்கள் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால், இந்த திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம். நீங்களும் எங்களுக்கு ஆதரவளித்தீர்கள். வெற்றி பெற்ற நாங்களும் கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளோம்.
திட்டத்தை அறிவித்தபோது எதிர் முனையில் இருந்தவர்கள் இதை இழித்தும், பழித்தும் பேசினர். கலர் டிவி வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பியதோடு, ஏமாற்றுகிறார்கள்; ஓட்டு போடாதீர்கள் என்று கூறினர்.
ஆனால், ஏமாந்தவர்கள் யார் என்று இன்று நன்றாகவே தெரிகிறது. இலவசமாக கலர் டிவி வழங்கும் திட்டம் என்பது மிகப்பெரிய சாதனை. இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதில்லை.
முதல்கட்டமாக ரூ. 9 கோடி ரூபாய் செலவில் 30,000 டிவிக்களும், இரண்டாவது கட்டமாக ரூ. 685 கோடி செலவில் 25 லட்சம் டிவிக்களும் வழங்கப்பட்டன.
எங்களுக்கு டிவி கிடைக்கவில்லை என்று சிலர் கேட்பது எங்களுக்கும் கேட்கிறது. தமிழகத்தில் 6 கோடி மக்கள் வாழ்கிறார்கள். ஒரு கோடிக்கும் அதிகமாக குடும்பங்கள் இருக்கின்றன. அனைவருக்கும் ஒரே நேரத்தில் டிவி வழங்கிட முடியாது, படிப்படியாகத் தான் வழங்க முடியும்.
தொடர்ந்து மக்களுக்கு இலவச கலர் டிவிக்கள் வழங்கப்படும். 3வது கட்டமாக ரூ. 750 கோடி செலவில் 34.25 லட்சம் டிவிக்கள் வாங்கப்பட்டு அவை வந்து கொண்டிருக்கின்றன.
டிவிக்கள் வர வர மக்களுக்கு வழங்கப்படும். டிவி வழங்க முடியாது என்று கூறியவர்கள் மத்தியில் முடிகிறது பார் என்று அறைகூவல் விட்டு திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம்.
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக மட்டும் இந்த டிவிக்களை வழங்கவில்லை. உலகச் செய்திகளை, நம் நாட்டு செய்திகளை, வாழ்க்கை முறைகள் குறித்த நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்ள டிவி பயன்படுகிறது.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை, என்றைக்கும் ஏமாற்ற மாட்டோம் என்றார் கருணாநிதி.