For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களுக்கு மலேசிய பிரதமர் படாவி திடீர் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Abdullah Ahmad Badawi
கோலாலம்பூர்: மலேசியாவில் இனி தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தினால் காலவரையின்றி சிறையில் அடைக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் அப்துல்லா அகமது படாவி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மலேசிய இந்தியர்கள் பெரும் கொந்தளிப்படைந்துள்ளனர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இங்கிலாந்து தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் திரண்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான்.

மலேசிய அரசு தங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதை எதிர்த்தும், சம உரிமை கோரியும், தங்களது இன்றைய நிலைக்கு தங்களது முன்னோர்களை மலேசியாவில் குடியமர்த்திய இங்கிலாந்து அரசுதான் காரணம் என்று கூறி, இங்கிலாந்து தூதரகத்திடம் மனு கொடுக்கவே அவர்கள் திரண்டிருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு மலேசிய அரசு அனுமதி தரவில்லை. ஆனால் தடையைத் தாண்டி திரண்டிருந்த தமிழர்கள் உள்ளிட்ட மலேசிய இந்தியர்கள் இங்கிலாந்து தூதரகம் நோக்கிச் சென்றனர். அப்போது மலேசிய போலீஸார் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர்.

இந்தியர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீரங்கிகளால் தாக்கியும் மிகக் கொடூரமாக நடந்து கொண்டனர். இதில் பல தமிழர்கள் படுகாயமடைந்தனர். 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மலேசிய அரசின் இந்த செயலுக்கு தமிழகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமரின் திடீர் எச்சரிக்கை:

இந்த நிலையில், தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் இனிமேல் வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இனிமேல் வீதிகளுக்கு வந்து போராடுவதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். அப்படி செயல்பட்டால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கைது செய்யப்படுவோர், எந்தவித விசாரணையும் இன்றி காலவரையின்றி சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று படாவி எச்சரித்துள்ளார்.

படாவியின் இந்த எச்சரிக்கையினால், மலேசிய இந்தியர்கள் கொதிப்படைந்துள்ளனர். இத்தகைய மிரட்டலுக்குப் பணியப் போவதில்லை என்றும், சம உரிமை கிடைக்கும் வரை, பாரபட்சப் போக்கு நீங்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதுவரை இல்லாத போராட்டம்:

இதற்கிடையே, தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் நடத்தியுள்ள இந்தப் போராட்டம் கடந்த 10 ஆண்டுகளில் நடந்திராத மிகப் பிரமாண்டமான போராட்டம் என்று வர்ணிக்கப்படுகிறது.

ஆனால் அமைதியான முறையில் நடந்திருக்க வேண்டிய போராட்டம், மலேசிய அரசு மற்றும் காவல்துறையின் தேவையில்லாத நடவடிக்கையால் அசம்பாவிதத்தில் முடிந்துள்ளதாக தமிழர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X