நீதிமன்றங்களில் இந்தி திணிப்பு: பாஜக ஆதரவு, திமுக கூட்டணி எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தீர்ப்புகளை இந்தியில் வழங்க நாடாளுமன்றக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதை கடுமையாக எதிர்த்து திமுக கூட்டணி எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனு கொடுத்துள்ளன.

நேற்று லோக்சபாவில் தமிழக எம்.பிக்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி எழுந்து, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தீர்ப்புகளை இந்தியில் வழங்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது என்று கூறினர்.

ஆனால், தமிழக எம்பிக்களின் எதிர்ப்புக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வட மாநில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துப் ேபசினர்.

இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின்னர் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தனர். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர்.

இதுதொடர்பாக டி.ஆர்.பாலுவின் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் இந்தி மொழியில் தீர்ப்பு கூறுவற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாம் என நாடாளுமன்ற அதிகாரப் பூர்வ மொழிக்கான கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக பிரதமரை சந்தித்து அளிக்கப்பட்ட மனுவில், நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள், இந்திய சட்ட கமிஷன் தலைவரான நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இருக்கும் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்காமல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி, உயர்நீதிமன்றங்களில் தமிழ் உள்பட மாநில மொழிகளில் தீர்ப்புக்களை வெளியிட பிரதமரை வலியுறுத்தி வரும் நிலையில், அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையை நீங்கள் ஏற்கக் கூடாது. இது தேசிய ஒற்றுமையை குலைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் இந்த பரிந்துரை குறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.ஆர்.தாஸ் முன்ஷியும் உறுதியளித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திக்கு பாஜக ஆதரவு:

இதற்கிடையே, தமிழக எம்.பிக்களின் எதிர்ப்புக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதிமன்றங்களில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதில் பாஜகவுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை.

உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருப்பதால் வக்கீல்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் இந்தியைப் பயன்படுத்தினால் இந்தப் பிரச்சினை தீரும்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்த பாஜக ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அதேசமயம், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலத்துடன் இந்தியையும் பயன்படுத்தலாம் என்பதே பாஜகவின் கருத்து. இதை திமுக கூட்டணி எம்.பிக்கள் எதிர்ப்பது தவறு. மாறாக தமிழையும் பயன்படுத்த வேண்டும் என்றுதான் அவர்கள் கோரியிருக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+