அதிகரிக்கும் ரூபாய் மதிப்பால் திணறும் சாப்ட்வேர் நிறுவனங்கள்
பெங்களூர்: அதிகரித்து வரும் ரூபாயின் மதிப்பால் சாப்ட்வேர், பிபிஓ, கால்சென்டர் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு டாலருக்கு சில ஆண்டுகளுக்கு முன் வரை ரூ. 48 வரை இருந்த ரூபாயின் மதிப்பு இப்போது ரூ. 39 ஆகிவிட்டது. டாலரின் மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த சரிவால் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகரித்ததே ரூபாயின் மதிப்பு அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும். இதனால் முன்பு ஒரு டாலர் ஈட்டினால் ரூ. 48 ரூபாய் சம்பாதித்த நிறுவனங்கள் இன்று வெறும் ரூ. 39 தான் ஈட்டுகின்றன.
இதனால் திருப்பூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். டாலர் சிக்கலில் இருந்து தப்பிக்க ஐரோப்பிய யூரோவை நாட ஆரம்பித்துவிட்டன. தங்களது வர்த்தகத்தை யூரோவில் நடத்த ஆரம்பித்துள்ளன.
ஆனால், பெரும்பாலான சாப்ட்வேர், பிபிஓ, கால்சென்டர் நிறுவனங்களில் டாலரில் தான் வர்த்தகம் நடக்கிறது. இதனால் பெரும் நஷ்டத்தை இந்த நிறுவனங்கள் சந்திக்க ஆரம்பித்துள்ளன.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட செலவுகளை குறைக்கும் வேலையில் இந்த ஐ.டி. நிறுவனங்கள் இறங்கியுள்ளன. வேலை நேரத்தை 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை குறைத்து மின்சாரத்தை சேமிக்கும் செயலில் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்களிடம் பில் செய்ய முடியாத சப்போர்ட் ஸ்டாப் எனப்படும் எச்.ஆர், அக்கெளண்ட்ஸ் போன்ற பிரிவுகளுக்கு நிரந்தரமாக ஆள் சேர்ப்பதை தவிர்த்துவிட்டு காண்ட்ராக்ட் ஊழியர்களை நியமிக்க ஆரம்பித்துள்ளன பல நிறுவனங்கள். விப்ரோ, இன்போசிஸ், ஐபிஎம் போன்ற ெபரிய நிறுவனங்களே இந்த வேலையில் இறங்கிவிட்டன.
பல முக்கிய நிறுவனங்கள் வரும் மார்ச் வரை வேலைக்கு ஆள் சேர்ப்பதை ஒத்தி வைத்துவிட்டு இருக்கும் ஊழியர்களுக்கு அதிக வேலையை தர ஆரம்பித்துள்ளன.












Click it and Unblock the Notifications