சேலம் உருக்காலையில் புதிய உற்பத்திப் பிரிவு
டெல்லி: சேலம் எஃகு உருக்காலையில், ஆண்டுக்கு 1 லட்சத்து 80 ஆயிரன் டன் இரும்பை உருக்கும் வசதி கொண்ட புதிய பிரிவு தொடங்கப்படவுள்ளதாக மத்திய இரும்புத் துறை இணை அமைச்சர் அகிலேஷ் தாஸ் லோக்சபாவில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில், சேலம் உருக்காலையில், ஆண்டுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் டன் இரும்பை உருக்கும் வசதி கொண்ட புதிய பிரிவு தொடங்கப்படவுள்ளது.
ஆரம்பத்தில் பயன்பாடற்ற இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தி எஃகு உற்பத்தி மேற்கொள்ளப்படும். பின்னர் நேரடியான இரும்பைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக காஞ்சமலை இரும்புத் தாது படிவப் பகுதியை குத்தகைக்கு விடுமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 0.34 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு விடப்படும். தற்போது இதன் அளவு 0.18 மில்லியன் டன்களாக உள்ளது.
இந்தப் புதிய விரிவாக்கத் திட்டத்தின் மூலம் ஏராளமான பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications