மோசமான சாலையில் வேண் உருண்டு 5 மாணவர்கள் காயம்
சென்னை:மோசமான சாலையில் சிக்கி பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விழுந்ததில் 3 சிறுமிகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை சேலையூரில் கிறிஸ்துராஜா மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வருகின்றனர்.
நேற்று காலை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை அருகே இப்பள்ளியின் வேன் மாணவ, மாணவிகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது மழை மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் படு மோசமாக, மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையில் வேன் டிரைவர் வேகமாக வேனை ஓட்டிக் கொண்டு வந்தார்.
இதில் நிலை தடுமாறிய அந்த வேன், அப்படியே தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று வேனுக்குள் சிக்கி அலறிய குழந்தைகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 7வது வகுப்பு படிக்கும் ரேவதி (13), பொன்மணி (13), கார்த்திக், நான்காவது வகுப்பு படிக்கும் டிக்சன் (9), 2ம் வகுப்பு படிக்கும் சரோஜா (8) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் 20 மாணவ, மாணவியர் லேசான காயமடைந்தனர்.
படுகாயமடைந்த ஐந்து பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் பள்ளிக்குச் சென்றனர்.
இந்த விபத்து குறித்து பள்ளி நிர்வாகம் (இந்தப் பள்ளியின் தாளாளர்தான் தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க தலைவராகவும் இருக்கிறார்) பெற்றோர்களுக்குத் தெரிவிக்காமல் இருந்து விட்டது.
இதனால் படுகாயமடைந்த ஐந்து மாணவ, மாணவியரும் மாலையில் வீடு திரும்பாததால் கவலை அடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்தனர். அப்போதுதான் தங்களது குழந்தைகள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவரம் அவர்களுக்குத் தெரிய வந்தது.
இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து உடனடியாக போலீஸில் புகார் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகத்தை வற்புறுத்தினர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் பள்ளமும், மேடுமாக உள்ள சாலையில் படு வேகமாக வேனை ஓட்டி வந்த டிரைவர் சுரேஷை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications