வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்-நீதிமன்ற பணிகள் பாதிப்பு
சென்னை: உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்றங்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதை கண்டித்து இன்று தமிழகத்தில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 23ம் தேதி பைசாபாத், லக்னெள மற்றும் வாரணாசியில் குண்டுவெடிப்புகள் நடந்தது. இதில் பைசாபாத், லக்னெள ஆகிய இடங்களில் நீதிமன்ற வளாகங்களுக்குள் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
நீதிமன்றங்களில் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புகளைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணிக்கு வந்திருந்தனர். ஆனால் வழக்கறிஞர்கள் எவரும் பணிக்கு வராததால் அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர். இதே நிலைதான் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் நீடித்தது.
இதனால் சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் அனைத்திலும் வழக்கறிஞர்கள் வராததால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
மதுரையில்...
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்கள் எவரும் வராததால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. இதேபோல் மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணிக்கு வராததால் இதே நிலை தான் நீடித்தது.












Click it and Unblock the Notifications