துபாயில் கட்டட சாரம் சரிந்து விழுந்து 2 தமிழர்கள் பலி
துபாய்: துபாயில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டத்தில் சாரம் உடைந்து, சரிந்து விழுந்ததில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 2 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சுலைமான் (23), நிஜாமுதீன்(25) இருவரும் அந்த கட்டடத்தில் லிப்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மிக உயரமான இடத்தில் சாரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அந்த சாரம் திடீரென உடைந்து சரிந்தது. இதில் இருவரும் கீழே விழுந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இவர்களுடன் வேலை பார்த்து வந்த மற்ற 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்த இந்த இருவரின் உடல்களை தமிழகத்திற்கு அனுப்ப அவர்கள் வேலை பார்த்த கட்டட நிறுவனம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.9 லட்சம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. கடந்த 9ம் தேதி துபாயில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 தமிழர்கள் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.