தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: உள்துறைச் செயலாளருக்கு நோட்டீஸ்
டெல்லி: சாலை விதிகளை கடுமையாக கடைப்பிடித்து, விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யதாததற்கு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
'காமன் காஸ்' என்கிற பொது நல அமைப்பின் தலைவர் விக்ரம் லால் இதுதொடர்பான பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,
இந்தியா முழுவதும் உள்ள சாலைகளில் நல்ல விளக்கு வசிகளை ஏற்படுத்தி, சாலை விதிகளை முறையாக அமல்படுத்தி, தேவைப்படும் இடங்களில் பாலங்கள், குறுக்குச் சாலைகளை அமைத்து விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
மோட்டார் வாகனங்கள் அல்லாத பிற வாகனங்களுக்கு சாலையில் தனி இடம் ஒதுக்க வேண்டும். சாலை விபத்துக்களில் சிக்குவோரைக் காக்க ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்பட வேண்டும் என்று கோரியிருந்தார் லால்.
இந்த மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதில் தமிழக அரசு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எச்.கே.சேமா, வி.எஸ்.சிர்புர்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். பலமுறை விளக்கம் அளிக்க வாய்ப்புகள் அளித்தும் கூட தமிழக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாதது கண்டனத்துக்குரியது என்று கூறினர்.
மேலும் ஜனவரி 20ம் தேதிக்கு வழ்கை தள்ளி வைத்த நீதிபதிகள், அன்றைய தினம் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.