புதுவையில் குண்டுவெடிப்பு: சிறுவன் பலி
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று இரண்டு பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். மற்றொரு சம்பவத்தில் அதிமுக பிரமுகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
புதுச்சேரி, வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கணேஷ். அதிமுக பிரமுகரான இவருக்கும், பிரான்ஸ் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு கணேஷும், அவரது குடும்பத்தினரும் வீட்டின் முதல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் ஒரு நாட்டு வெடிகுண்டு வீட்டுக்குள் வந்து விழுந்து வெடித்தது.
இதில் அறையின் ஜன்னல் கதவுகள் சிதறின. குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் விரைந்து வந்தனர். வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்து கிடந்ததைப் பார்த்தனர்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் சென்றது. போலீஸார் விரைந்து நடவடிக்கையில் இறங்கி ராஜ்குமாரைக் கைது செய்தனர். மற்றவர்களைப் பிடிக்க தீவிர வேட்டை நடந்து வருகிறது.
சிறுவன் பலி:
அதே வண்ணாரப்பேட்டை பகுதியில், இன்று பிற்பகலில் இன்னொரு குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இன்று பிற்பகுதியில், இந்திய உணவுக் கழக கிட்டங்கி உள்ள பகுதியில் விஜய் என்ற சிறுவனும் அவனுடைய நண்பர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ரயில் பாதையை ஒட்டிய இடத்தில் ஒரு பாலிதீன் பை கிடந்ததைப் பார்த்த சிறுவர்கள், அந்த பையை எடுத்தனர். அதை விஜய் திறக்க முயன்றான். அப்போது அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் விஜய் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தான். அவனுடைய நண்பர்கள் விக்கி, தமிழ்செல்வன், சூசை ராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த மூன்று பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களால் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீசிய நபர்கள் போட்டுச் சென்ற குண்டுகளில் ஒன்றுதான் வெடித்து விஜய் இறந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் ரங்கசாமி, அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவர்களைப் பார்த்து உடல் நலம் விசாரித்தார்.