தமிழகத்தை இருளில் மூழ்கடித்த திமுக அரசை கண்டித்து போராட்டம்-ஜெ
சென்னை: தமிழகத்தை இருளில் மூழ்கடிக்கச் செய்த திமுக அரசைக் கண்டித்தும், மின் உற்பத்தியைப் பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
மின் உற்பத்தி, அனுப்புகை மற்றும் பகிர்மானம் ஆகியவற்றை சீரிய முறையில் மேற்கொண்டு, மின் உபயோகிப்பாளர்களுக்கு தரமான மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு எனது தலைமையில் அரசு செயல்பட்டு வந்தது.
இதனால் விவசாயிகள், நெசவாளர்கள், சிறுதொழில் முனைவோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தடையின்றி மின்சாரம் பெற்று நிம்மதியுடன் வசித்து வந்தனர்.
மின் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருந்த தமிழகத்தை குறைந்த மின் அழுத்தம், மின்தடை, மின்வெட்டு என படிப்படியாக பின்னடைவுகளைச் சந்திக்க வைத்து தமிழகத்தை மின் பற்றாகுறை மாநிலமாகத் திகழச்செய்த பெருமை கருணாநிதியையும், ஆற்காடு வீராசாமியையும் தான் சேரும்.
தமிழகத்தில் இந்த வருடம் காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய 1,500 மெகாவாட், என்.எல்.சி மூலம் கிடைக்க வேண்டிய 500 மெகாவாட் மின்சாரம் ஆகியவை கிடைக்கப் பெறாததாலும், திமுக ஆட்சியில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் தமிழகத்து வந்துள்ளதால், மின் தேவையின் அளவு 700 மெகாவாட்டாக உயர்ந்திருப்பதால் மின் பற்றாக்குறை அதிகரித்திருப்பதாக ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
எனது ஆட்சியில் 150 மெகாவாட் திறனுடைய பைக்காரா இறுதி நிலை புலன் மின்நிலையத்தை, நீலகிரி மாவட்டத்தில் ஏற்படுத்துவதற்கு மத்திய அரசில் இருந்தபடி பல தடைகளை ஏற்படுத்தினார் கருணாநிதி. தற்போது அவரது ஆட்சியில், தமிழக மக்களுக்காக மத்திய அரசிடம் இருந்து மின்சாரத்தைக் கூடப் பெற முடியவில்லை.
தமிழகத்துக்கு ஒரு திட்டம் கொண்டு வரப்படுகிறது என்றால், அதை முடக்குவதில் கருணாநிதிக்கு இருக்கும் ஆர்வம், அதை கொண்டுவருவதில் இருக்காது.
திமுக அரசு வந்த பின்னர் வந்த அனைத்து தொழில்களும் ஒப்பந்த நிலையிலேயே உள்ளன. என் ஆட்சியில் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 8,775 மெகாவாட் என்ற நிலையில் தான் உள்ளது என்பதை வீராசாமி தனது பேட்டியிலேயே குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்தே திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் புதிய தொழிற்சாலைகள் எதுவும் வரவில்லை என்பது தெளிவாகிறது.
இது மட்டுமின்றி தமிழகத்தில் தற்போதைய மின் உற்பத்தி 7,500 மெகாவாட்டாகவும், மின்தேவையோ 8,800 மெகாவாட்டாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் செய்த தவறை மறைப்பதற்காக முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை ஆற்காடு வீராசாமி தெரிவித்து வருகிறார்.
தமிழகத்தில் உள்ள பல மின் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாதது, வட சென்னை மற்றும் தூத்துக்குடி மின்நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்படுதல், கருணாநிதி மற்றும் ஆற்காடு வீராசாமியின் கவனக்குறைவு ஆகியவைதான் தற்போது ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு காரணம்.
பிரகாசமாக சுடர்விட்டு விளங்கிய தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்த திமுக ஆட்சியின் அவல நிலையைக் கண்டித்தும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் மின்சார உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதிமுக சார்பில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டிசம்பர் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஏதாவது ஒரு நாளில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications