ஆசிரியரை கன்னத்தில் அறைந்த மாணவன் டிஸ்மிஸ்
சென்னை: ஆசிரியரை கன்னத்தில் அறைந்த மாணவனை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது.
சென்னையை அடுத்துள்ள மணலியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியொன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளிக்கு சென்ற இவர் நேற்று வகுப்பறையில் பாடத்தை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். இதைப் பார்த்த வகுப்பாசிரியர் மரியசூசை மாணவன் வினோத்குமாரை கடுமையாக கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார் தன்னை கண்டித்த ஆசிரியரை வகுப்பறையில் வைத்து கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார்.
இதை மரியசூசை உட்பட சக மாணவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. விஷயம் தெரிந்தவுடன் அனைத்து ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர் தனபாலிடம் புகார் செய்தனர். இதனால் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாகலிங்கம் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து மாணவன் வினோத்குமாரை டிஸ்மிஸ் செய்ய முடிவெடுத்தனர்.
பின்னர் வினோத்குமாரின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் நடந்த சம்பவத்தை சொல்லி தலைமை ஆசிரியர் டி.சியை கொடுத்தார். பின்னர் மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முழு ஆண்டு தேர்வை மட்டும் எழுத தலைமை ஆசிரியர் அனுமதித்தார்.
ஆசிரியரை மாணவன் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications