உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கேரளா - துரைமுருகன்
பாபநாசம்: கேரள மாநில அணைகளின் பட்டியலில் முல்லை பெரியாறு அணையை சேர்த்தது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைப் பகுதிகளில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் கேரள அரசு 136 அடிக்கு மேல் நீரை தேக்க கூடாது எனக் கூறி வருகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில், கேரள அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்து அம்மாநில அணைகளின் பட்டியலில் முல்லை பெரியாறு அணையை சேர்த்துள்ளது. இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானதுடன் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும்.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு வரும் 16ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி எடுத்துக் கூறப்படும்.
நெல்லை மாவட்டத்தில் புதிய அணை கட்டும் திட்டம் இல்லை. மணிமுத்தாறு அணை கட்டி 50 ஆண்டுகள் ஆகின்றன. அணைப் பகுதிகளில் நல்ல நிலையில் இருந்த பூங்கா தற்போது மோசமான நிலையில் உள்ளது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும்.
அந்த ஆய்வறிக்கையின் படி விரைவில் பூங்கா புதுப்பொலிவுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குளங்கள், ஏரிகள் திமுக ஆட்சியில் தான் பராமரிக்கப்பட்டு தூர் வாரப்படுகின்றன.
கன்னடியன் கால்வாயிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல இங்குள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தண்ணீரை கொண்டு செல்ல முடிந்தால் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
உச்சநீதிமன்றத்தில் தற்போது ஆங்கிலத்திலும், இந்தியிலும் தீர்ப்பு சொல்லப்படுகிறது. தமிழிலும் தீர்ப்பு சொல்வதற்கு நானும், தமிழக முதல்வரும் ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளோம். அது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க மீண்டும் கடிதம் எழுதுவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications