போராட்டத்தை தீவிரமாக்கும் மருத்துவ மாணவர்கள்
சென்னை: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பாக அகில இந்திய மருத்துவ மாணவர் சங்கத்தின் கூட்டம் இன்று மும்பையில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவுள்ளது.
கட்டாய கிராமப்புற சேவை, மருத்துவப் படிப்பை ஆறரை ஆண்டுகளாக மாற்றும் முடிவை எதிர்த்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில்தான் இந்தப் போராட்டம் வெகு தீவிரமாக உள்ளது.
இப்போராட்டத்தை பாமக தீவிரமாக விமர்சித்து வருகிறது. பாமகவின் நெருக்குதல் காரணமாக தமிழக அரசும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு திங்கள்கிழமை முதல் வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லாவிட்டால், கல்லூரிகளும், விடுதிகளும் மூடப்படும் எனவும் அது அறிவித்துள்ளது.
இருப்பினும் இந்த எச்சரிக்கையை மருத்துவ மாணவர்கள் நிராகரித்துள்ளனர். கல்லூரிகளை மூடினாலும், விடுதிகளை மூடினாலும் தங்களது போராட்டம் நிற்காமல் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
மாணவர்களோடு சேர்ந்து அவர்களின் பெற்றோர்களும் தற்போது போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது குறித்தும், போராட்டத்தை அகில இந்திய அளவில் விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்க மும்பையில் அகில இந்திய மருத்துவ மாணவர் கூட்டமைப்புடன் தமிழக மாணவர்கள் பிரதிநிதிகள் இன்று கூடி விவாதிக்கவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது. நாளை முதல் அகில இந்திய அளவில் பெரிய அளவில் போராட்டம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
கார்த்திக் சந்திப்பு:
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்களை பார்வர்ட் பிளாக் தலைவர் நடிகர் கார்த்திக் இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு வந்த கார்த்திக், மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்துவ மாணவர்களுக்கு 5 வருட படிப்பே அதிகம்.
இதில் கிராமப்புற சேவை என்ற பெயரில் மேலும் ஒரு வருடத்தை படிக்கச் சொல்வது தவறு. வேண்டுமென்றால் அவர்களுக்கு டாக்டர் பட்டத்தை கொடுத்துவிட்டு அதன் பின்னர் கிராமத்தில் சேவை செய்ய அழைக்கலாம். மாணவர்களாக இருக்கும் போது கட்டாய சேவை என்று வற்புறுத்தக் கூடாது.
தமிழக அரசு கல்லூரி மற்றும் விடுதிகளை மூடப் போவதாக அறிவித்திருப்பது மாணவர்களை மிரட்டுவது போல் உள்ளது. மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தால் நாங்களும் அதில் பங்கேற்போம் என்றார்.












Click it and Unblock the Notifications