இன படுகொலை புகாரை நிரூபித்தால் விலகத் தயார்: மலேசிய பிரதமர்

கோலாலம்பூர்: மலேசியத் தமிழர்களின் இனப்படுகொலை குறித்த புகார் அடிப்படையற்றது, பொய்யானது. அதை நிரூபித்தால் பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார் என அந்நாட்டு பிரதமர் அப்துல்லா அகமது படாவி தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தமிழர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை வழங்கப்பட வேண்டும், பாரபட்சப் போக்கு களையப்பட வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.
இதுதொடர்பாக இங்கிலாந்து தூதரகத்தில் அமைதியான முறையில் மனு கொடுக்கச் சென்ற தமிழர்கள் மீது மலேசிய காவல்துறை நடத்திய அடக்குமுறைத் தாக்குதல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் நடைபெறுவதைப் போல, மலேசிய அரசும், தமிழர்களை அழித்தொழிக்கும் இனப் படுகொலை நடவடிக்ைகயில் இறங்கியுள்ளதாக மலேசியத் தமிழர்கள் பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
இந்தப் புகாரை மலேசியப் பிரதமர் படாவி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழர்கள் மீது மலேசிய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அவர்களும் மலேசிய குடிமக்கள்தான். அவர்களுக்கு எதிராக இன ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போராட்டக்காரர்கள் கூறியுள்ளது தவறான குற்றச்சாட்டு.
இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழுவின் (ஹிண்ட்ராப்) குற்றச்சாட்டு பொய்யானது. இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. இதனால் மலேசியாவில் இன மோதல்கள் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
இந்தப் புகாரால் நான் மிகவும் கோபமடைந்துள்ளேன். இதை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது.
போஸ்னியாவில் நடந்ததுதான் இனப் படுகொலை. அங்குதான் போஸ்னியர்களை, செர்பியர்கள் குறி வைத்துக் கொன்றனர். அதுதான் இனப் படுகொலை.
மலேசியாவில் வாழும் இந்திய வம்சவாளியினரின் முன்னேற்றத்திற்காக நான் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளேன். எப்போதும் அவர்களை நான் ஒதுக்க நினைத்ததில்லை. பல வகைகளில் அவர்களுக்கு உதவியுள்ளேன்.
அவர்களின் கோவில்களைப் புணரமைக்க நிதியுதவி செய்துள்ளேன். நாங்கள் பிற மதங்களையும் மதிக்கிறோம். யாரும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது. இந்திய வம்சவாளியினரும் மலாய் இனத்தவருடன் சுமூகமாகத்தான் பழகி வருகின்றனர்.
மலேசியாவின் சுதந்திரத்திற்கு இந்திய வம்சவாளியினர் பெரும் உதவியாக இருந்தனர் என்பதை நான் மறுக்கவில்லை. முழுமையாக அதை ஆமோதிக்கிறேன்.
இனப் படுகொலை என்ற புகாரை அவர்கள் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் எனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயார் என்றார் அப்துல்லா அகமது படாவி.
ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் வாய்த மூர்த்தி, சமீபத்தில் இணையதளம் ஒன்றில் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனுக்கு எழுதியிருந்த கடிதத்தில் இந்த இனப் படுகொலைப் புகாரை கூறியிருந்தார்.
2001ம் ஆண்டு மலேசியாவின் செலாங்கர் மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இது ஒரு மினி இனப்படுகொலை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் இன்னொரு தலைவரான உதயக்குமார் எழுதிய கடிதத்தில், ஒவ்வொரு மூன்று வாரத்திற்கும் ஒரு இந்துக் கோவில் மலேசியாவில் இடிக்கப்படுவதாக கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications