பெங்களூரில் இறங்கிய சென்னை விமானத்தில் தீ
பெங்களூர்: பெங்களூருக்குச் சென்ற சென்னை சரக்கு விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக அபுதாபிக்குச் செல்லும் சரக்கு விமானம் நேற்று இரவு பெங்களூர் வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்ட அந்த விமானம் 8.20 மணியளவில் அபுதாபி கிளம்பியது.
ரன்வேயில் விமானம் ஓடியபோது திடீரென என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து விமானி, வேகமாக விமானத்தை நிறுத்தி விட்டார். விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் பறந்தது.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். துரிதமாக தீயணைப்புப் படையினர் செயல்பட்டதால் தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது. சற்று தாமதித்திருந்தாலும் கூட பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.
விமானி பத்திரமாக தரையிறக்கப்பட்டார். வேறு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. வேறு விமானங்களும் கிளம்பவில்லை.
சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த 25 பயணிகள் விமானங்கள் அந்தந்த ஊர்களுக்கே திருப்பி விடப்பட்டன. இதனால் சுமார் 1 மணி நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications