நடராஜனுடன் தொடர்பு: 10 அதிமுகவினர் நீக்கம்
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக 10 அதிமுகவினரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் கணவர் நடராஜனை ஜெயலலிதா ஒதுக்கி வைத்துள்ளார். அவருடன் அதிமுகவினர் தொடர்பு ஏதும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இருந்தாலும் அதிமுகவினர் பலர் தொடர்ந்து நடராஜனுடன் நல்ல தொடர்பில்தான் இருந்து வருகின்றனர். அவர்களை அவ்வப்போது கட்சியிலிருந்து நீக்கி வருகிறார் ஜெயலலிதா.
இந்த நிலையில், திருச்சி, கரூர் மாவட்டங்களில் நடராஜன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த விழாக்களில் திரளான அதிமுகவினரும் பங்கு கொண்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா திருச்சி மாவட்ட அதிமுக இணைச் செயலாளர் நசீரா பேகம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட பெண்கள் அணி பொருளாளர் நிர்மலா உள்ளிட்ட 10 பேரின் பதவிகளையும், கட்சி உறுப்பினர் பதவியையும் பறித்துள்ளார்.
இவர்களுடன் அதிமுக தொண்டர்கள் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதேபோல கரூர் மாவட்டத்தில் நடராஜன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவினரின் பதவிகளுக்கும் ஆப்பு வைக்கப்படும் என்று கரூர் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பீதி நிலவுகிறது.












Click it and Unblock the Notifications