போலி பாஸ்போர்ட்: 7 இலங்கைத் தமிழர்கள் கைது
சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணை என்ற இடத்தில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபட்ட 7 இலங்கைத் தமிழர்கள் உள்பட 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சங்கராபுரம் என்ற இடத்தில் போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் நடத்திய சோதனையின்போது ஏராளமான போலி பாஸ்போர்ட்டுகள் சிக்கின.
இதுதவிர வங்கி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், இமிக்ரேஷன் அதிகாரிகள் உள்ளிட்டோரின் போலி ரப்பர் ஸ்டாம்புகள் உள்ளிட்டவையும் சிக்கின. இதைப் பார்த்து அதிர்ந்த அதிகாரிகள் அங்கு தங்கியிருந்தவர்களிடம் விசாரித்தபோது போலி பாஸ்போர்ட், விசா தயாரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து செந்தில்நாதன் (32), சிவக்குமார் (29), மகேஸ்வரன் (32), ராஜேந்திரன் (21), மனோரமணன் (30), கஜேந்திரன் (29), சுரேஷ்குமார் (30), ராமமூர்த்தி (25) ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து கம்ப்யூட்டர், ஸ்கேனர்கள், பிரிண்டர்கள், வேதிப் பொருட்கள், லேமினேஷன் பேப்பர்கள், ரூ. 3.5 லட்சம் ரொக்கப் பணம், 1000 அமெரிக்க டாலர்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கும்பல் கடந்த ஒரு வருடமாகவே இந்த போலி பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இவர்களுடன் மேலும் பலருக்கும் தொடர்பு இருக்கும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கோவிந்தராஜனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications