பன்னாட்டு முதலீடுகள்: சென்னை, ஹைதராபாத் முதலிடம்!
கர்நாடக மாநிலம் குல்பர்காவில், கர்நாடக தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எஸ்.பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கர்நாடகம் ரூ. 35,000 கோடி முதலீடுகளை இழந்துள்ளது.
இந்த முதலீடுகள் எல்லாம் சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும் போய் விட்டன. இதற்கு முக்கியக் காரணம் தமிழக, ஆந்திர அரசுகள் சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களை சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு கொண்ட நகரங்களாக மாற்றி வைத்திருப்பதுதான்.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள் சென்னை அல்லது ஹைதராபாத் நகரங்களைத்தான் அதிகம் விரும்புகின்றன. அங்கு முதலீடுகளை அதிக அளவில் குவிக்க அவை தயாராக உள்ளன.
கர்நாடக நகரங்களை விட சென்னை, ஹைதராபாத் நகரங்களில் சிறந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும், பிற வசதிகளும், செளகரியங்களும், சிறந்த தொழிலாளர்கள் கிடைப்பதும் இதற்கு முக்கியக் காரணம்.
கர்நாடக மாநிலம் ஆண்டுதோறும் சராசரியாக நான்கு பெரும் பன்னாட்டு முதலீடுகளை இழந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமில்லாத தன்மையும் முதலீடுகள் கை நழுவிப் போக முக்கிய காரணம். இதனால் தொழில் வளர்ச்சி மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
ஆசியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற பெயர் பெங்களூருக்கு இருந்தாலும் கூட, அதற்குத் தேவையான, அதற்குப் பொருத்தமான வளர்ச்சியை பெங்களூர் இன்னும் அடையவில்லை.
பெங்களூர் நகரைச் சுற்றிலும் நிறைய துணை நகரங்களை ஏற்படுத்த வேண்டும். தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மாநில அரசு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றார் பாட்டீல்.