தர்றோம்..தர்றோம்.. வேணாம்.. வேணாம்: 'எல்லாமே தலைகீழ்'!
சென்னை: ஸ்ரீசைலம் அணை நிரம்பி வருவதால் சென்னைக்கு கூடுதலாக நீரைத் திறந்துவிட ஆந்திரம் முன் வந்துள்ளது. ஆனால், சென்னை ஏரிகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால் நீர் வேண்டாம் என தமிழகம் கூறிவிட்டது. இதையடுத்து கிருஷ்ணா கால்வாய் தாற்காலிகமாக மூடப்பட்டுவிட்டது.
சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக தெலுங்கு-கங்கா என்ற கிருஷ்ணா கால்வாய் தோண்டப்பட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீசைலத்தில் இருந்து சென்னை வரை 408 கி.மீ. தூரத்துக்கு தோண்டப்பட்ட இந்தக் கால்வாயில் 1996ம் ஆண்டு முதல் ஆந்திரம் தண்ணீர் வழங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 2 தவணையாக மொத்தம் 15 டிஎம்சி தண்ணீரை ஆந்திரா வழங்க வேண்டும். ஆனால், கர்நாடகத்தைப் போலவே ஆந்திரமும் உடன்பாட்டின்படி சரியான அளவு தண்ணீரை கொடுத்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் போராட்டம் தான்.
இந் நிலையில் சமீப காலமாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருவதால் நிலைமை தலைகீழாகிவிட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழிவதால் கிருஷ்ணா நீரே தேவையில்லை என்ற நிலை உருவாரிவிட்டது.
ஆந்திராவிலும் கன மழை பெய்து வருவதால் ஸ்ரீசைலம் அணை நிரம்பிவிட்டது. இதனால் அங்கிருந்து நீரை தமிழகத்து திருப்பிட ஆந்திரா தானாகவே முன்வந்துள்ளது.
ஆனால் சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பதால் இப்போதைக்கு தண்ணீர் வேண்டாம் என்று தமிழகம் கூறிவிட்டது. கூடுதல் நீரை தேக்க சென்னையில் மாற்று வசதியோ நீர்த் தேக்கங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கிருஷ்ணா கால்வாய் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications